மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 23,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்


மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 23,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு  16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2022 8:00 PM GMT (Updated: 13 Dec 2022 8:00 PM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று நள்ளிரவில் வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து உள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை

மேட்டூர் அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக 120 அடியை எட்டி சமீபத்தில் நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

மின் உற்பத்தி அதிகரிப்பு

இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 11 ஆயிரத்து 600 கனஅடியாகவும், நேற்று காலையில் வினாடிக்கு 21 ஆயிரத்து 600 கனஅடியாகவும் அதிகரித்தது. இதையடுத்து அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வீதமும் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர் மின்நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதால் இந்த மின் நிலையங்களில் நடைபெற்று வந்த மின் உற்பத்தியின் அளவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றம்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 16 கண் மதகுகள் வழியாகவும் உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 5-ந் தேதி அணைக்கு கூடுதல் நீர்வரத்து ஏற்பட்ட போது 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் உபரிநீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story