அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை திருட்டு


அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை திருட்டு
x

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

குடும்ப கட்டுப்பாடு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலா (வயது 37). சற்று காது கேட்காமல் இருப்பதோடு, பேசவும் முடியாதவர் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 3-வது முறையாக கர்ப்பிணியான சூரியகலா கடந்த 4 தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதன்பின் அவர் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குழந்தை திருட்டு

இந்த நிலையில், நேற்று மதியம் சூரியகலா அடையாளம் தெரியாத பெண்ணோடு உணவு சாப்பிட்டதாகவும், சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளிந்தபின் எழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தில் விசாரித்தும் குழந்தை கிடைக்காததால் போலீசாருக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சூரியகலாவுடன் உணவு சாப்பிட்ட பெண்தான் குழந்தையை திருடியிருக்க வேண்டும் என கருதிய போலீசார் மருத்துவமனை வார்டிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மொட்டை தலையுடன் கூடிய பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

பெண்ணுக்கு வலைவீச்சு

மேலும் பிரசவ வார்டில் குழந்தையை கடத்திச்சென்ற பெண், சில பொருட்களை விட்டுச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்ததில் அந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்துள்ளது.

அந்த பெண்ணிண் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இரவு காவலர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story