பள்ளி வாகனங்கள் ஆய்வு


பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 13 May 2023 7:00 PM GMT (Updated: 13 May 2023 7:01 PM GMT)

பழனியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

திண்டுக்கல்


வட்டார போக்குவரத்து துறை சார்பில் பழனியில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் உள்ள மைதானத்தில் நடந்த இந்த ஆய்வுக்கு, பழனி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள், இருக்கைகள் வசதியாக உள்ளதா?, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், விபத்தின்போது வெளியேறுவதற்கான அவசரவழி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்கி பார்த்ததோடு வேன், பஸ்களை இயக்கும் டிரைவர்களின் தகுதி, ஓட்டுனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனையில் தகுதியான வாகனங்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொடர்ந்து தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர், வாகனங்ளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என செயல்விளக்கம் அளித்தனர்.


பள்ளி வாகனங்கள் ஆய்வு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆய்வில் 103 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் 25 வாகனங்களில் போதிய வசதிகள் இல்லாததால் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த வாகனங்களில் அனைத்து வசதிகளும் செய்தபின் இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும். அதையடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின்பே அனுமதி வழங்கப்படும் என்றனர்.



Next Story