பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தீவிரம்


பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தீவிரம்
x

கரூர் பஸ் நிலையத்தில் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்

பஸ் நிலையம்

கரூர் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்தை சுற்றியும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் மற்றும் வணிகவளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்கின்றன.

இதனால் எப்போதும் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அவற்றின் மேல் கூரைகள் சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுந்த வண்ணம் இருந்தது.

கடைகள் காலி

மேலும் அதில் கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பாக அந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கடைகளை கட்டும் வகையில் பஸ் நிலையத்தின் தென்புறம் அமைந்துள்ள 21- க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்து காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்தநிலையில் கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. பின்னர் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அந்த கட்டிடங்களுக்கு அருகில் செல்லாமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து கட்டிடங்களுக்குள் செல்ல முடியாத வகையில் மறைக்கப்பட்டன.

அகற்றும் பணி தீவிரம்

இந்நிலையில் பழுதடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று ராட்ச பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பழுதடைந்த கடைகள் அனைத்தையும் இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை விரைவில் இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.


Next Story