காரைக்குடி பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வெளிேயறும் தண்ணீர்


காரைக்குடி பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வெளிேயறும் தண்ணீர்
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:45 PM GMT)

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் காரைக்குடி பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி,

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் காரைக்குடி பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை தீவிரம்

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள், ஏரிகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வைகையாற்றில் தண்ணீர் வரத்தும் அதிகமாக உள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதால் திருப்புவனம் அருகே பூவந்தி கண்மாய், திருப்பத்தூர் அருகே ஏரியூர் கண்மாய், சிங்கம்புணரி பகுதியில் உள்ள பாலாறு உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இங்குள்ள கண்மாய்கள், ஊருணிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. திருப்பத்தூர் அருகே ஏரியூர் கண்மாய் தொடர்ந்து 3-வது ஆண்டாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

விவசாய பணிகள் தீவிரம்

இதேபோல் காரைக்குடியை சுற்றியுள்ள செஞ்சை நாட்டார் கண்மாய், அதலை கண்மாய், குடிக்காத்தான் கண்மாய், அரியக்குடி கண்மாய், கோவிலூர் கண்மாய், பெரிய கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பி தற்போது மதகுகள் வழியாக மறுகால் பாய்ந்து வருகிறது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு சென்று உற்சாக குளியல் செய்து வருகின்றனர். மேலும் கண்மாய்கள் நிரம்பி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உழவு செய்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story