பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரம்


பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரம்
x
நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காய்கறி சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதேபோல் சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட சைனிஸ் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.

தரமான காய்கறிகளை ஏற்றுமதி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் உடையது. இதனால் நீலகிரி பூண்டுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பூண்டு பயிரிட்டனர்.

பூண்டு அறுவடை

கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் பூண்டு பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது விளைந்த பூண்டுகளை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலத்தில இருந்து பூண்டு செடிகளை வெட்டி எடுத்து, தொழிலாளர்கள் பூண்டுகளை தரம் பிரிக்கின்றனர். பின்னர் வெயிலில் நன்றாக காய வைத்து விற்பனைக்காக அனுப்பி வைக்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு பூண்டு கிலோ ரூ.200 வரை விலை கிடைத்தது. பிற மாநிலங்களில் இருந்து காய்கறி மண்டிகளுக்கு பூண்டு வரத்து அதிகரித்தது. இதனால் பூண்டு கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து, கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது கொள்முதல் விலை உயர்ந்து பூண்டு கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. வருகிற மாதங்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story