புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 33 பேர் காயம்


புதுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர். மாடுகள் முட்டி 33 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 292 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை தூய மங்கள அன்னை ஆலய பங்குத்தந்தை ரெஜிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 684 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

33 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணிக்கு நிறைவடைந்தது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரிசுப்பொருட்கள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மின்விசிறி, நாற்காலிகள், பரிசு பெட்டகம், வெள்ளி மற்றும் தங்ககாசுகள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கியம் மேரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story