கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நகை மதிப்பீட்டாளர்கள் திடீர் போராட்டம்


கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நகை மதிப்பீட்டாளர்கள் திடீர் போராட்டம்
x

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நகை மதிப்பீட்டாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் 23-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரி கூறியதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நகை மதிப்பீட்டாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் 23-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரி கூறியதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கோரிக்கை

குமரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு தீபாவளி போனஸ், தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகை மதிப்பீட்டாளர்கள் ஏற்கனவே கூட்டுறவு சங்க இணை பதிவாளரிடம் மனு அளித்திருந்தனர். பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் ஜான் விக்டர் தாஸ் தலைமையில் நிர்வாகிகள், நகை மதிப்பீட்டாளர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடத்தில் உள்ள கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அதிகாரியை சந்தித்து பேசினார்கள். அப்போது அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திடீர் போராட்டம்

இதனால் இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நகை மதிப்பீட்டாளர்கள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற 23-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர் தெரிவித்தார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஆதி திராவிட முன்னேற்ற இயக்க நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நகை மதிப்பீட்டாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story