"தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தருவோம்"


தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தருவோம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தருவோம் என்றும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது எனவும் காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

சிவகங்கை

காரைக்குடி,

தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தருவோம் என்றும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது எனவும் காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவில் நடைபெற்றது.

பா.ஜனதா சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி வரவேற்றுப் பேசினார்.

ஜே.பி.நட்டா பேச்சு

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு, நமது நாட்டு மக்களை காப்பாற்றினார். அதோடு உலக நாடுகளுக்கும் உதவி செய்து, உலகின் உன்னத தலைவர் ஆனார்.

சுகாதாரம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி, அதற்காக ஏராளமான நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளது. இது சம்பந்தமான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கும் ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏற்கனவே வழங்கிய நிதி ஒதுக்கீடு தவிர கூடுதலாகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகத்தின், ெரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

வேகமான முன்னேற்றம்

விவசாயிகள் மேம்பாட்டிற்காகவும், ஏழை மக்களின் நலனுக்காகவும் பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் தமிழகம் பயன்பெறுவது அதிகம்.

உற்பத்தியில் இறக்குமதி என்ற நிலையில் இருந்த இந்தியாவை தற்போது ஏற்றுமதி என்று நிலைக்கு பா.ஜனதா ஆட்சி கொண்டு வந்துள்ளது. உலகமே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

தமிழகத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட பாரம்பரிய பொருட்களை மீட்டு கொடுத்துள்ளோம். பா.ஜனதா, கொள்கை பிடிப்புள்ள கட்சி. பா.ஜனதா மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருகின்றன..

குடும்ப ஆட்சி

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலத்தில் குடும்ப ஆட்சியும், குடும்ப அரசியலும் நடைபெறுகிறது.

தமிழக மக்கள் தற்போது கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இதை நான் நன்கு புரிந்துகொண்டேன். நம்பிக்கையோடு காத்திருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பா.ஜனதா கட்சி தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நூல் வெளியீடு

ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி பற்றிய நூலை நட்டா வெளியிட அதனை, பா.ஜனதா பட்டியல் சமுதாய பிரிவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் விசுவநாத கோபாலன் பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாயிகள் பிரிவு மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில பட்டியல் சமுதாய பிரிவு செயலாளர் ஆதீனம், சிவகங்கை மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பூப்பாண்டி, சிவகங்கை தெற்கு ஒன்றிய தலைவர் வக்கீல் முத்துப்பாண்டி, நகர தலைவர் பாண்டியன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



Next Story