மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்சிறார் திரைப்பட போட்டி
![மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்சிறார் திரைப்பட போட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்சிறார் திரைப்பட போட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/03/30/1208439-school.webp)
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறார் திரைப்பட போட்டி
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் வட்டார அளவில் சிறார் திரைப்படம் சார்ந்த போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. '101 சோதியங்கள்' என்ற திரைப்படம் போட்டு காட்டப்பட்டு அதில் இருந்து போட்டிகள் நடத்தப்பட்டது. திரைப்பட கதையை நடித்து காண்பித்தல், திரைப்படத்தின் ஒரு பகுதியை இயக்குதல், திரைப்படத்தைப் பற்றி விவாதித்தல், திரைப்படத்தின் வடிவமைப்பு பற்றியும் விவாதித்தல், திரைப்படத்தின் போஸ்டர் வரைதல், திரை விமர்சனம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவன் ஆதித்யா போஸ்டர் வரைதல் போட்டியிலும், சேயூர் அரசு பள்ளி மாணவி எப்சிபா திரை விமர்சனம் போட்டியிலும் வெற்றிப் பெற்றனர். இவர்கள் இருவரும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் ரவி சிவகுமார் செய்திருந்தார்.
-------