கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஜாமினில் வெளிவந்த ஆசிரியைகள்


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஜாமினில் வெளிவந்த ஆசிரியைகள்
x
தினத்தந்தி 31 Aug 2022 3:12 AM GMT (Updated: 31 Aug 2022 3:16 AM GMT)

சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில், பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டார்.

பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நிபந்தனைகள் விதித்துள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.


Next Story