கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை தாமதிக்காமல் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை தாமதிக்காமல் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை தாமதிக்காமல் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல் துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தனது மகள் செல்போன் வைத்திருக்கவில்லை எனவும், விடுதி காப்பாளரின் செல்போனில் இருந்தே பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? செல்போனை ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் சட்டப்படி குற்றம், அதற்காக பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

செல்போன் இருந்தால் உடனடியாக அதனை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்

இந்நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இன்று ஐகோர்ட்டில் ஆஜராகி, மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது எனவும், அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாவவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். செல்போனை அரசு வழக்கறிஞர் தரப்பில் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், விசாரணை நடத்தும் காவல்துறையிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை புலன் விசாரணை செய்து வரும் காவல்துறையிடம் செல்போனை வழங்கினால் அதை உடனடியாக தடயவியல் சோதனைக்கு அனுப்பி, அறிக்கை பெற முடியும் என்று நீதிபதி தெரிவித்ததுடன், மாணவியின் தந்தை முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தார்.

மேலும், தாமதிக்காமல் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story