கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து பேசி கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 'இனி தொழில் செய்யவே முடியாது' என்ற நிலைக்கு வந்துள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரி அனுமதி பெற்றிருப்போர் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள், கடந்த 3 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு காரணம், சரளைக் கற்கள் போன்ற சிறு கனிமத்திற்குகூட கனிமத் திட்டம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாகவும், இதுபோன்ற நிபந்தனைகளுடன் தொழிலை தொடர முடியாது என்றும், பெரிய கனிமத்திற்குத் தான் இது பொருத்தமாக இருக்கும் என்றும், இதுபோன்ற நிபந்தனைகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு விதித்ததாகவும், இது அண்டை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குவாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு இல்லாத நிலை

மேலும், தமிழ்நாடு அரசுதான் இதனை நடைமுறைப்படுத்துகிறது என்றும், குவாரிகளுக்கான அனுமதியை பொறுத்தவரை ஆந்திர பிரதேசம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் எளிமையான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், தமிழ்நாட்டில் அனுமதி வழங்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

ஒரு இடத்தில் பல குவாரிகள் இயங்குவதற்கான பரப்பளவு 25 எக்டேரில் இருந்து 5 எக்டேராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், குவாரி உரிமையாளர்களை சமூக விரோதிகள் மிரட்டி பணம் பறிப்பதாகவும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சுமுக தீர்வு

பிற மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 2,000 லாரிகளில் கற்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கட்டிடத் தொழில் மிகப் பெரிய பாதிப்பினைச் சந்திக்கும். இதன் காரணமாக கட்டுமானச் செலவு மேலும் பன்மடங்கு அதிகரித்து ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்துப் பேசி அதற்கு ஒரு சுமுக தீர்வு காணவும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை கைத்தொழிலாக மேற்கொள்வதற்கான அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் வழங்கவும் முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story