சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,520-க்கு ஏலம்; ஒரே நாளில் 820 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,520-க்கு ஏலம்; ஒரே நாளில் 820 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரே நாளில் கனகாம்பரம் பூ கிலோ ஒன்று 820 ரூபாய் உயர்ந்து ரூ.1,520-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரே நாளில் கனகாம்பரம் பூ கிலோ ஒன்று 820 ரூபாய் உயர்ந்து ரூ.1,520-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூக்கள் ஏலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த பூக்களை ஏலத்துக்காக கொண்டு வருவர். நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு 5 டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.720-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.1,520-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.420-க்கும், முல்லை ரூ.252-க்கும், காக்கடா ரூ.375-க்கும், செண்டுமல்லி ரூ.51-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்று முன்தினத்தை விட மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.300-க்கும், முல்லை ரூ.288-ம், காக்கடா ரூ.125-ம், செண்டுமல்லி ரூ.9-ம், பட்டுப்பூ ரூ.20-ம், சாதிமல்லி ரூ.100-ம், கனகாம்பரம் ரூ.820-ம், அரளி ரூ.20-ம், துளசி ரூ.10-ம், சம்பங்கி ரூ.20-ம் விலை உயர்ந்து ஏலம் போனது. ஒரே நாளில் கனகாம்பரம் பூ கிலோ ஒன்று ரூ.820 உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வரலட்சுமி பூஜை

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'நாளை மறுநாள் (அதாவது நாளை) கர்நாடக மாநிலத்தில் வரலட்சுமி பூஜை நடைபெறுகிறது. இதனால் கர்நாடக மாநில வியாபாரிகளுக்கு பூக்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் பூக்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

இதன்காரணமாக அனைத்து பூக்களும் விலை உயர்ந்து விற்பனை ஆனது. அதிலும் கனகாம்பரம் பூ 5 கிலோ மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. அதே வேளையில் கனகாம்பரம் பூவை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. இதனால் ஒரே நாளில் கனகாம்பரம் கிலோ ஒன்று ரூ.820 விலை உயர்ந்து ஏலம் போனது,' என்றனர்.


Next Story