மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி தொடக்கம் - வைகோ கண்டனம்


மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி தொடக்கம் - வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 24 July 2023 7:47 AM GMT (Updated: 24 July 2023 9:12 AM GMT)

மேகதாது அணை கட்டுமானப்பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா கடந்த ஜூலை 7ம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் வரவு - செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், "மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும், மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்" என்றும் முதல்-மந்திரி அறிவித்தார்.

இதற்கு முன்பு மேகதாது அணை தொடர்பாக ஜூலை 4ம் தேதி துணை முதல்-மந்திரி சிவகுமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அணை கட்டுவதற்கு எல்லை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி, அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காண்பதற்கும், அகற்றப்பட வேண்டிய மரங்களை கணக்கீடு செய்வதற்கும், கர்நாடக வனத்துறை சார்பில், 29 துணை வன அதிகாரிகளை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் அனில்குமார் ரதன் உத்தரவு பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரு சதுக்கம், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் தலா ஐவர், பெங்களூரு, வன ரோந்து படை, சாம்ராஜ் நகர் சதுக்கம், பிலிகிரி ரங்கமலை புலிகள் காப்பகத்தில் தலா நால்வர், மைசூரு சதுக்கம், மலை மாதேஸ்வரன் வன விலங்கு சரணாயலத்தில் தலா மூவர், காவிரி வன விலங்கு சரணாலயத்தில் ஒருவர் என 29 துணை வன அதிகாரிகள் நில அளவீடுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், உடனடியாக சாம்ராஜ்நகர் சதுக்கத்தின் தலைமை வனக்காப்பாளர் அலுவலகத்தில் இப்பணியில் இணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்துக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. 2007, பிப்ரவரி 5ம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு கர்நாடகா 192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16, 2018 இல் அளித்த தீர்ப்பில், கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டது. ஆனால் இந்த குறைந்த அளவு நீரைக் கூட கர்நாடகா திறந்து விட மறுக்கிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறியும், தமிழகத்தின் மரபு உரிமையை மீறியும் மேகதாது அணை கட்டுமானப் பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகதாது அணை வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story