கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை



அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு சாமி வீதி உலாவிற்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் ஊர்வலம் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் நடைபெற்றது.

இன்று கொடியேற்றம்

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள். அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படும்.

இந்த ஆண்டு மகா தீபத்தன்று திருவண்ணாமலைக்கு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

திருக்குடைகள் ஊர்வலம்

விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி மாடவீதி உலா நடைபெற உள்ளது. ஆண்டு தோறும் சாமி வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் சேவா சங்கத்தினர் சார்பில் நேற்று கோவிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான 10 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

முன்னதாக மாட வீதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற்றது. ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தலைவர் ரவி தலைமையில் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது சிவனடியார்கள் நடனமாடியபடி வந்தனர். இது பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story