பிரதமரின் கிசான் சம்மன் நிதி பெறுபவர்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்
![பிரதமரின் கிசான் சம்மன் நிதி பெறுபவர்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள் பிரதமரின் கிசான் சம்மன் நிதி பெறுபவர்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/11/818441-cdl-7-10.webp)
பிரதமரின் கிசான் சம்மன் நிதி பெறுபவர்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதவாது:-
பாரத பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய் 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
பதிவை புதுப்பிப்பது மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும். புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். எனவே தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுடன் பொது சேவை மையங்களுக்கு சென்று உடனடியாக புதுப்பித்து கொள்ளலாம். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பிக்கலாம்.
வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்போது இணைத்துக் கொள்ளலாம்.
மனுதாரர் பெயரில் சிட்டா இருக்க வேண்டும், கூட்டுபட்டாவாகவும் இருக்கலாம். குத்தகை போக்கிய நிலங்கள் பதிவு புதுப்பிக்க இயலாது. எனவே உரிய காலத்திற்குள் பதிவை புதுப்பித்து நிதி உதவியினை தடங்கலின்றி தொடர்ந்து பெற்று பயனடையுங்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.