தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x

பெற்றோருக்கு திதி கொடுத்த போது பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பெற்றோருக்கு திதி கொடுத்த போது பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஓட்டல் தொழிலாளி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 58). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, இறந்து போன தனது பெற்றோருக்கு திதி கொடுப்பதற்காக நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு குடும்பத்தினருடன் வந்தார். பாபநாசம் கோவில் மண்டபம் அருகில் பெற்றோருக்கு திதி கொடுப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி தாமிரபரணி ஆற்றில் இறங்கினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கினார்.

உடல் மீட்பு

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தாமிரபரணி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர், ஆற்றில் மூழ்கி இறந்த கிருஷ்ணமூர்த்தியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடலை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாபநாசத்தில் பெற்றோருக்கு திதி கொடுக்க வந்த மகன், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story