3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
![3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/28/1205882-court.webp)
ஓசூர் அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பலாத்காரம் செய்து கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி ஓசூர் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட முத்துவுக்கு 3 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தையை கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.