அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்


அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்
x

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்காக தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் குழந்தைகளுக்கான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில் அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகளை நிறுத்துவதற்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்தது.

எதற்காக இந்த வகுப்புகள் மூடப்படுகிறது என்பதற்கான விளக்கத்தையும் தமிழக பள்ளி கல்வித்துறை அளித்திருந்தது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பள்ளிக்கூடங்களில் இந்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதே போன்று பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது.

தொடர்ந்து செயல்படும்

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 381 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

முந்தைய ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக சுமார் 7 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3 ஆயிரம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story