போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 20). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பொன்னர் (24). லாரி டிரைவர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் 2 பேரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் காதலர்கள் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story