வெள்ளி சூரியபிரபை வாகனத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா


வெள்ளி சூரியபிரபை வாகனத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா
x

ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி வெள்ளி சூரியபிரபை வாகனத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார்.

புதுக்கோட்டை

ஆனி திருமஞ்சன திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார்.

அதன்படி நேற்று 2-ம் நாள் திருவிழாவில் வெள்ளி சூரியபிரபை வாகனத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனைகளை செய்து மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

தேரோட்டம்

வருகிற 1-ந் தேதி காலை பிட்டு நேர்பட மண்சுமந்த பேரருள் காட்சியும், மாலை 108 சங்காபிஷேகமும், இரவு குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வருகிறார். 2-ந் தேதி காலை வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் காட்சியும், மாலை திருவாசகத்திற்கு பொருள் உரைத்த காட்சியும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் மதுரை பெருநன் மாநகர் தன்னில் குதிரை சேவகன் காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் மாணிக்கவாசகர் வலம் வருவார். இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 4-ந் தேதி காலை பிச்சாடனர் அலங்கார காட்சியும், பஞ்சப்பிரகார சேவையும் நடக்கிறது. 5-ந் தேதி வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் மாணிக்கவாசகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story