கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி செய்ய வேண்டும்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி செய்ய வேண்டும்
x

உடுமலை அருகே பண்ணைக்கிணரில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

உடுமலை அருகே பண்ணைக்கிணரில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர், சாலை வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை மருத்துவக்கல்லூரி

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை மற்றும் மீன்வளத்துறையின் சார்பில் உடுமலை அருகே பண்ணைக்கிணரில் புதிதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. புதிய கல்லூரிக்கான கட்டிடங்கள் 42.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.82 கோடியே ஒரு லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.

புதிய கல்லூரியில் நிர்வாக கட்டிடம் மட்டுமல்லாமல் கால்நடை மருத்துவத்தின் 17 சிறப்பு துறைகளுக்கான கல்விக்கூடங்கள், மதிப்பு கூட்டிய இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தொழில்நுட்பக்கூடம், பிரேத பரிசோதனை கூடம் போன்ற வசதிகளுடன் மாணவ மற்றும் மாணவிகளுக்கான தனித்தனியே விடுதிகள், முதல்வர் குடியிருப்பு விடுதி, காப்பாளர் குடியிருப்புகள், உணவகம், கால்நடை மருத்துவ வளாகம் மற்றும் கால்நடை பண்ணை வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சுவர், சாலை வசதி

கால்நடை மருத்துவ வளாகம் கரூர்- பொள்ளாச்சி மாநில நெடுஞ்சாலையில் பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது. இங்கு பெரிய மற்றும் சிறிய காடு, கால்நடைகளுக்கான தனித்தனியே மருத்துவ கூடம், அறுவை சிகிச்சை பிரிவு, ஈனியல் பிரிவுகள், புற நோயாளி பிரிவு, கதிரியக்கப்பிரிவு, எண்டோஸ்கோபி பிரிவு, பிசியோதெரபி பிரிவு, தோல் நோய்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் ஆய்வக வசதிகள் என கால்நடை துறையின் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சாலை வசதி செய்யப்படவில்லை. கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வரும் வகையில் பஸ் வசதிகள் பொள்ளாச்சி உடுமலை பகுதிகளில் இருந்து செய்து தர வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story