நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பிளவுபட்டிருக்கிறது. மூன்று, நான்காக உடைந்திருக்கிறது என்று சொல்கிறார். மூன்றாக, நான்காக உடையவில்லை. ஒன்றாக இருக்கிறது என நாமக்கல்லில் நடந்த இக்கூட்டம் சாட்சி அளிக்கிறது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என பல்வேறு முயற்சி எடுத்தீர்கள். அத்தனையும் தோல்வியில்தான் முடிந்தது.

வழக்கு போடுவார்கள்

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக எதிர்த்து ஓட்டுப்போட்டவர் தான், ஓ.பன்னீர்செல்வம். அதையெல்லாம் மறந்து எதிரிக்கு நாம் வழிவிட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்டவர்களை மீண்டும் இணைத்து, அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி, இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியை கொடுத்ததுதான் நாம்.

அதைக்கூட மறந்து தற்போது அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்தவரை என்னவென்று சொல்வது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள், தி.மு.க.வின் 'பி டீ'மாக செயல்படுகின்றனர். எப்போதெல்லாம் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க.வை எதிர்க்க முடியாதோ, அப்போதெல்லாம் நம் மீது வழக்கு போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை அதைத்தான் செய்கிறார்கள். நேரடியாக அ.தி.மு.க.வை எதிர்க்க தெம்பு, திராணி இல்லாத கட்சி தி.மு.க. அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாது. கொல்லைப்புறமாக நுழைந்து, நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள்.

மெகா கூட்டணி

எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனையும் தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.

அப்போது நாமக்கல் தொகுதியில் 5.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். அதற்கு இந்த கூட்டம் அச்சாணியாக விளங்குகிறது. அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டில் எதையும் நிறைவேற்றவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு மறதி அதிகம் என கருதுகிறேன்.

திராவிட மாடல்

எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் இப்போதைய ஆட்சியாளர்கள் ரிப்பன் வெட்டி திறக்கிறார்கள். கடந்த 18 மாதத்தில் எந்த பெரிய திட்டத்தை கொண்டு வந்தீர்கள்?. அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது தான் தி.மு.க. ஆட்சியின் சாதனை. அதை தான் திராவிட மாடல் என்கிறார்கள். இந்த 18 மாதத்தில் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்.?

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறீர்கள். மாறாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய்யாக அவதூறு பிரசாரம் செய்கிறார். அதை கண்டிக்கிறோம். உண்மையை மறைக்க முடியாது. அதற்கு மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடி விட்டீர்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர். 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் 565 ஏழை மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அது சிறந்த திட்டமாக விளங்கியதால், தற்போது மருத்துவக் கல்லூரி அல்லாது பிற கல்லூரி மாணவர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நடைமுறைப்படுத்தி உள்ளார். அதன் மூலம் ஆளும்கட்சிக்கு நல்ல யோசனை வழங்கும் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க.வினர் தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது அவரது சொந்த கட்சியினரின் செயல்பாட்டால் அவரே தினந்தோறும் காலையில் அச்சத்தில் கண் விழிப்பதாக வாக்குமூலம் அளிக்கிறார்.

அவரால் அவரது கட்சியினரையே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், தொண்டர்கள் அனைவரும் கட்டுப்பாட்டோடு ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்பாக உள்ளனர்.

மின்கட்டணம் உயர்வு

எங்கள் ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் கொடுத்தோம். மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது மின் கட்டணம் 12 முதல் 53 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story