அரசு பஸ்சை வழிமறித்து பூ வியாபாரி தீக்குளிப்பு


அரசு பஸ்சை வழிமறித்து பூ வியாபாரி தீக்குளிப்பு
x

வடமதுரை அருகே ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடையை அகற்றியதால் ஆத்திரமடைந்த பூ வியாபாரி அரசு பஸ்சை வழிமறித்து தீக்குளித்தார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடையை அகற்றியதால் ஆத்திரமடைந்த பூ வியாபாரி அரசு பஸ்சை வழிமறித்து தீக்குளித்தார்.

கடை அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி என்ற லிவர் பாண்டி (வயது 30). இவர், அய்யலூர் மேம்பாலம் அருகே சாலையோரம் பூக்கடை வைத்திருந்தார்.

அய்யலூர் மேம்பாலம் அருகே சமீபத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி சில கடைகளை போலீசார் அகற்றினர். அதில், பாண்டியின் பூக்கடையும் ஒன்று. இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, அவ்வப்போது புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ரகளை-தீக்குளிப்பு

இந்தநிலையில் இன்று பாண்டி அய்யலூர் மேம்பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ்சை அவர் திடீரென வழிமறித்து நிறுத்தினார். இதனால் அவரிடம் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் தட்டிக்கேட்டனர்.

அப்போது பாண்டி, தான் வைத்திருந்த கம்பால் அரசு பஸ்சை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அருகில் ஏற்கனவே வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்த பாண்டி, திடீரென்று தனது உடல் மீது மண்எண்ணெயை ஊற்றினார்.

பின்னர் தனது உடல் மீது அவர் தீயை பற்ற வைத்தார். அப்போது அருகில் நின்றிருந்த பாண்டியின் மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பாண்டி சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் பாண்டியை அவரது உறவினர்கள் மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதுதொடர்பாக பாண்டியிடம் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையை அகற்றியதால் ஆத்திரமடைந்த வியாபாரி அரசு பஸ்சை வழிமறித்து தீக்குளித்த சம்பவம் அய்யலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story