சிதம்பரத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரத்தில்  ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு  2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

சிதம்பரத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கலா ராணி (வயது 52). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தனர். அங்கு, தங்களது தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்தை பெற்றனர். பணத்தை ஸ்கூட்டரில் இருக்கைக்கு கீழ் பகுதியில் உள்ள பெட்டியின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.

பணம் திருட்டு

அப்போது, சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை சண் முகம் வாங்கி கொண்டிருந்தார். கலாராணி மட்டும் ஸ்கூட்டர் அருகே நின்று கொண்டிருந்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கலாராணியிடம் உங்கள் பணம் ரூ.60 கீழே விழுந்துள்ளது என்று கூறினர். உடனே கீழே குனிந்து அந்த பணத்தை அவர் எடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நபர்கள், ஸ்கூட்டர் சீட் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்தை எடுத்ததனர். இதை பார்த்த கலா ராணி திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து கலாராணி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், வங்கியில் இருந்து சண்முகம் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்க முடியும் என்று கருதி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story