மாநகராட்சி குப்பை லாரி மோதி வாலிபர் பலி


மாநகராட்சி குப்பை லாரி மோதி வாலிபர் பலி
x

திருச்சி கோர்ட்டு அருகே மாநகராட்சி குப்பை லாரி மோதி வாலிபர் பலியானார். மற்றொரு விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.

திருச்சி

திருச்சி கோர்ட்டு அருகே மாநகராட்சி குப்பை லாரி மோதி வாலிபர் பலியானார். மற்றொரு விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.

மாநகராட்சி லாரி

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் மேலசெட்டித்தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் மணி (வயது 33). பயணிகளுக்கான தனியார் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி கோர்ட்டு வ.உ.சி சிலை அருகில் இருந்து பீமநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் மாநகராட்சி குப்பை லாரியை ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்த உடன் திருச்சி கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நிதிநிறுவன ஊழியர் சாவு

இதேபோல் திருச்சி தில்லைநகர் தேவர் காலனியை சேர்ந்தவர் அழகுராஜ் (53). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இவர் கோரையாறு பாலம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் அழகுராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story