மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்


மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்
x

மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

பெரம்பலூர்

குன்னம்:

கல்லூரி மாணவர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கிருஷ்ணன்(வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கு விடுதியில் தங்கிருந்த அவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பரவாய் கிராமத்திற்கு வந்தார்.

இதையடுத்து கடந்த 8-ந் தேதி மாலை தனது தாய் உமாவிடம் அருகில் உள்ள வேப்பூர் கிராமத்திற்கு சென்று வருவதாக அவர் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் கிருஷ்ணனை தேடியும், அவர் கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் உமா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

கிணற்றில் பிணம்

இந்நிலையில் நேற்று காலை பரவாய் கிராமத்தில் இருந்து ஆண்டி குரும்பலூர் செல்லும் சாலையில் புளியந்தோப்பு அருகில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபரின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து கிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தது கிருஷ்ணன்தான் என்று தெரிவித்தனர்.

மேலும் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், குன்னம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே மகன்

இறந்துபோன கிருஷ்ணன் அவரது பெற்றோருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story