புதுக்கோட்டை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீசு


புதுக்கோட்டை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீசு
x

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீசு அனுப்பி, 15 நாட்களில் பதில் அளிக்க அறிவுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

கலெக்டருக்கு நோட்டீசு

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதிலும் விசாரணை நடைபெற்று வருகிற நிலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து, புதுடெல்லியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் சென்று சமீபத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோருக்கு ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வழக்குப்பதிவு, விசாரணை விவரம் உள்ளிட்டவை குறித்து 15 நாட்களுக்கு பதில் அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இல்லையெனில் ஆணையத்தில் நேரில் தாங்களோ அல்லது தங்கள் சார்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என எச்சரித்துள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வேங்கைவயல் வருகை?

இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் புதுடெல்லியில் இருந்து வேங்கைவயல் கிராமத்திற்கு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆணையத்தினை சேர்ந்த முக்கிய நபர்கள் நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளனர்.


Next Story