மன்னார்குடியில், தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்
![மன்னார்குடியில், தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் மன்னார்குடியில், தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/13/822302--0867.webp)
மன்னார்குடியில், தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்
மன்னார்குடி
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக மன்னார்குடி தேரடியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி, செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி, சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி ஆகிய 6 கலை அறிவியல் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மன்னார்குடியில் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைகழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லட்சுமி பிரபா தலைமை தாங்கினார். ஊர்வலத்தை நாட்டு நலப்பணித்திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரியார் சிலை, பஸ்நிலையம், பழைய தஞ்சாவூர் சாலை வழியாக சென்ற தேசிய கொடி ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் வந்தே மாதரம் என்றும், பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டனர். நிகழ்ச்சியை அரசு கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். இதில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் ராஜப்பா மற்றும் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.