பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா


பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா
x
தினத்தந்தி 8 Oct 2023 7:45 PM GMT (Updated: 8 Oct 2023 7:46 PM GMT)

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

திண்டுக்கல்

நவராத்திரி விழா

பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அதேபோல் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்களும் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்றைய தினம் கோவிலில் முருகப்பெருமான், துவார பாலகர்கள் மற்றும் கோவில் தெய்வங்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது. இதேபோல் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா அன்றே தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது. அதோடு மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அம்பு போடும் நிகழ்ச்சி

விழாவின் 9-ம் நாளான 23-ந் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 3 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதைத்தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வருதலும், அர்த்தசாம பூஜையும் நடக்கிறது. அதையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story