கவுந்தப்பாடி அருகேலாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி


கவுந்தப்பாடி அருகேலாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
x

கவுந்தப்பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நண்பர்கள்

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு (வயது 60). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சென்னியப்பன் என்பவர் மகன் ராமன் என்கிற ராமசாமி (வயது 48). சலூன்கடை உரிமையாளர். அய்யாவுவும், ராமிசாமியும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று மொபட்டில் கவுந்தப்பாடி பொம்மன்பட்டி ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். மொபட்டை அய்யாவு ஓட்டினார். அவருக்கு பின்னால் ராமசாமி அமர்ந்திருந்தார்.

சக்கரத்தில் சிக்கி சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக அய்யாவுவும், ராமசாமியும் நிலைதடுமாறி அந்த வழியாக கவுந்தப்பாடிக்கு வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் பின் சக்கரத்தின் அடியில் விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யாவு, ராமசாமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story