பெண்ணாடம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி தற்கொலை


பெண்ணாடம் அருகே  சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:46 PM GMT)

பெண்ணாடம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பொன்னேரி மேம்பாலம் அருகே நேற்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அருகே விஷ பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் இருந்தன.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் வங்காரம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (வயது57) என்பதும், கூலித்தொழிலாளியான இவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்ததும் தெரியவந்தது.

சிறுமியை கர்ப்பமாக்கியவர்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அன்பழகன், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அன்பழகன் மீது சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை தேடி வந்தனர். இதற்கிடையே சிறுமியை கர்ப்பமாக்கியது பற்றி அறிந்த கிராம மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பழகனை கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி பொன்னேரிக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

பரபரப்பு

இதையடுத்து அன்பழகனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story