பெரியகுளம் அருகேகிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி:நீச்சல் பழகியபோது பரிதாபம்


பெரியகுளம் அருகேகிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி:நீச்சல் பழகியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:46 PM GMT)

பெரியகுளம் அருகே நீச்சல் பழகியபோது, கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

தேனி

நீச்சல் பழகுதல்

பெரியகுளம் அருகே உள்ள முருகமலை நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் வசீகரன் (வயது 12). இவன், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். வசீகரன் நீச்சல் பழக வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தான். இதற்காக நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 4 பேருடன் அருகே உள்ள கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றான்.

வசீகரனுடன் சென்ற 4 பேருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் அவர்கள் முதலில் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். பின்னர் வசீகரன் இறங்கி அவர்களது கைகளை மாறி மாறி பிடித்து நீச்சல் பழகினான். அப்போது கிணற்றில் ஒரு புறத்தில் இருந்து மறு புறத்திற்கு வரும்போது திடீரென அவன் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்ட அவனது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் மூழ்கி அவனை தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாணவன் சாவு

இதையடுத்து அவர்கள் மேலே வந்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் கூறினர். அவர்கள் பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) தர்மராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மாணவனை தேடினர். அப்போது சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு வசீகரனை பிணமாக மீட்டனர்.

தகவல் அறிந்த பெரியகுளம் போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story