தாளவாடி அருகே ஆட்டுக்குட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தை


தாளவாடி அருகே  ஆட்டுக்குட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தை
x

தாளவாடி அருகே ஆட்டுக்குட்டியை சிறுத்தை கடித்துக்கொன்றது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே ஆட்டுக்குட்டியை சிறுத்தை கடித்துக்கொன்றது.

அட்டகாசம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து வருகின்றன.

அங்கு வீடு மற்றும் தோட்டம் முன்பு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. காவலுக்காக விடப்பட்டிருக்கும் நாய்களையும் சிறுத்தை விட்டு வைப்பதில்லை.

ஆட்டுக்குட்டி இறந்து கிடந்தது

தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 34). விவசாயி. இவரது வீடு வனப்பகுதியையொட்டி உள்ளது. இவர் தனது வீட்டின் முன்பு 4 ஆடுகளை கட்டி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிய அவர் வீடு முன்பு ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆடு அருகே மர்மவிலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது.

உடனே இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று வீடு முன்பு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரியவந்தது.

சிறுத்தை கொன்றது

வனப்பகுதியில் இருந்து மகாலட்சுமியின் வீட்டுக்கு வந்த சிறுத்தை அங்கு வீடு முன்பு கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை கடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது.

இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வீடுகள் மற்றும் தோட்டங்களில் முன்பு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும், நாய்களையும் வேட்டையாடி வந்தது. தற்போது மீண்டும் சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். மேலும் இறந்த ஆட்டுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story