தேனி அருகேபிளஸ்-2 மாணவர் சரமாரி வெட்டிக்கொலை:காரணம் என்ன? போலீஸ் விசாரணை


தேனி அருகேபிளஸ்-2 மாணவர் சரமாரி வெட்டிக்கொலை:காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 May 2023 6:45 PM GMT (Updated: 15 May 2023 6:46 PM GMT)

தேனி அருகே பிளஸ்-2 மாணவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தேனி

பிளஸ்-2 மாணவர்

தேனி அருகே வீருசின்னம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஊஞ்சாலம்மாள். இந்த தம்பதிக்கு கமலேஸ்வரன் (வயது 17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அதில், கமலேஸ்வரன் ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை.

வெட்டிக்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்தில் கமலேஸ்வரன் பிணமாக கிடப்பதாக ஊஞ்சாலம்மாளுக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். அங்கு கமலேஸ்வரன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு தலை திரும்பிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அவருடைய தாயார் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடலை போலீசார் பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து கமலேஸ்வரனின் தாயார் ஊஞ்சாலம்மாள் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த படுகொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story