தேனி அருகே இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் திடீர் சாவு


தேனி அருகே  இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் திடீர் சாவு
x

தேனி அருகே இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பணி உத்தரவு வாங்கி வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்

தேனி

கடமலைக்குண்டு ராமானுஜர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 53). இவர் கடமலைக்குண்டு அருகே காமன்கல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு உடல் நிலை பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் பணியில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை வாங்குவதற்காக நேற்று தேனி கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு அவர் வந்தார். அங்கு பணி உத்தரவு வாங்கிவிட்டு காரில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். கொடுவிலார்பட்டி அருகில் சென்றபோது காருக்குள் அமர்ந்து இருந்த ரவிச்சந்திரன் திடீரென மயங்கினார்.

அப்போது காரை ஓட்டிச் சென்ற நபர், ரவிச்சந்திரனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவருடைய மகன் பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story