உத்தமபாளையம் அருகேமோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி:மனைவி கண்முன் பரிதாபம்


உத்தமபாளையம் அருகேமோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி:மனைவி கண்முன் பரிதாபம்
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)

உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். அவரது மனைவி கண்முன் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

தேனி

ராட்சத குழாய் மீது மோதல்

தேனி அருகே உள்ள வீரபாண்டியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் அசோக்குமார் (வயது 24). கூலித்தொழிலாளி. கம்பத்தை சேர்ந்தவர் நந்தினி (19). இவர்கள் இருவருக்கும் கடந்த 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் நேற்று வீரபாண்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை அசோக்குமார் ஓட்டி சென்றார். நந்தினி அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தார்.

உத்தமபாளையம்-கம்பம் புதிய பைபாஸ் சாலையில் அனுமந்தன்பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அங்கு லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக பதிக்கப்பட்டு வரும் ராட்சத குழாய் சாலையோரம் கிடந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையோரம் கிடந்த ராட்சத குழாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

புதுமாப்பிள்ளை பலி

இதில் தூக்கி வீசப்பட்டதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே மனைவி கண்முன் பரிதாபமாக உயிரிழந்தார். நந்தினி படுகாயமடைந்தார். இதைக்கண்டதும் நந்தினி அவரது கணவரை தூக்கி மடியில் வைத்து கதறி அழுதார். இது காண்ேபார் நெஞ்சை கலங்க வைத்தது. இதற்கிடையே தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பலியான அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 35 நாட்களில் மனைவி கண்முன் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story