நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

சமூகநீதியை காக்கவும், மருத்துவக்கல்வி தரத்தை உயர்த்தவும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப்படிப்பை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்குவது, மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குவது ஆகியவற்றில் நீட் தேர்வு முழு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வுக்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில், அத்தேர்வை தொடருவது பெரும் சமூக அநீதியாகவே அமையும்.

இந்த சமூக அநீதியில் இருந்து அரசுப்பள்ளி மாணவர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவப்படிப்புகளில் அவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான தகுதி பெறுவோரிலும் 79 சதவீதத்தினர் நீட் தேர்வை 2 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை எழுதியவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மாணவர்கள் மீண்டும், மீண்டும் தனிப்பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதும் சூழலை உருவாக்கி இருப்பதன் மூலம் மருத்துவக்கல்வியை வணிகமாக்கும் முயற்சியில் நீட் வெற்றி பெற்றுள்ளது. மருத்துவக்கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதற்காகவும், தரத்தை உயர்த்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தேர்வு, அந்த நோக்கங்களுக்கு எதிராக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்போது, அதை ரத்து செய்வதுதானே சமூகநீதியாக இருக்கமுடியும். எனவே, சமூகநீதியைக் காப்பதிலும், மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story