புதிய கல்லறை தோட்டங்கள்: கிறிஸ்தவர்களிடம் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் -சீமான்


புதிய கல்லறை தோட்டங்கள்: கிறிஸ்தவர்களிடம் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் -சீமான்
x

புதிய கல்லறை தோட்டங்கள்: கிறிஸ்தவர்களிடம் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்தவ பெருமக்களின் நெடுநாள் கோரிக்கைகளான சென்னை மயிலாப்பூரில் புதிய கல்லறை தோட்டம் (மயானம்) அமைக்க அரசு இடஒதுக்கீடு செய்யவும் மற்றும் மூடப்பட்ட மந்தைவெளி புனித மேரி சாலை சென்னை மாநகராட்சி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தை திறந்திடவும் தமிழ்நாடு அரசு மறுத்து வருவது அம்மக்களிடையே மிகுந்த இன்னலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

உடல் அடக்கம் செய்ய இடமில்லை என்ற பொய்யான காரணங்களைக் கூறி கல்லறை தோட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மூடுவது கிறிஸ்தவ மக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும். கிறிஸ்தவ பெருமக்களின் மத வழக்கப்படி இறந்தவர்களின் உடல்களை கல்லறை தோட்டங்கள் அமைத்து நல்லடக்கம் செய்வது அவர்களின் தொன்றுதொட்ட நடைமுறையாகும்.

ஆனால், காலப்போக்கில் சென்னை போன்ற மாநகரங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக கல்லறை தோட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் கிறிஸ்தவ பெருமக்களின் நம்பிக்கைக்கும், வழக்கத்திற்கும் எதிராகவே உள்ளது மிகப்பெரும் கொடுமையாகும். எனவே அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளை சார்ந்த தலைவர்களை கொண்ட குழு அமைத்து புதிய கல்லறை தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்பதுடன், மூடப்பட்ட மற்றும் பயன்பாட்டில் உள்ள கல்லறை தோட்டங்களை அரசியல் தலையீடு இல்லாமல் கிறிஸ்தவ சபைகளே சுதந்திரமாக பராமரிக்க சட்டப்படியான பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story