ரெயில் மோதி புதுப்பெண் பலி


ரெயில் மோதி புதுப்பெண் பலி
x

அய்யலூர் அருகே, ரெயில் மோதி புதுப்பெண் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

புதுப்பெண் மாயம்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள நைனான்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் நந்தினி (வயது 20). இவர் வடமதுரை அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருப்பூரை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 12-ந்தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் நந்தினி தனது கணவர் வேல்முருகனுடன் நைனான்குளத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில், அங்குள்ள விநாயகர் கோவிலில் நடந்த விளக்கு பூஜையில் நந்தினி பங்கேற்றார். அதன்பிறகு அவர் அங்கிருந்து திடீரென மாயமானார்.

தண்டவாளத்தில் பிணம்

இதனையடுத்து நந்தினியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அதே பகுதியில் ரெயிலில் அடிபட்ட நிலையில் தண்டவாளத்தில் நந்தினி பிணமாக கிடந்தார். இதனைக்கண்ட அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த வாரம் மணக்கோலத்தில் காட்சி அளித்த நந்தினி, தண்டவாளத்தில் பிணக்கோலத்தில் கிடந்ததை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் நந்தினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி பலி

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நைனான்குளத்துப்பட்டி பகுதியில் நேற்று காலை 6.45 மணிக்கு நந்தினி ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கிறார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் மோதி நந்தினி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி புதுப்பெண் ஒருவர் பலியான சம்பவம் அய்யலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story