தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி


தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
x

அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை தனியார் கல்லூரிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தனியார் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற கடிவாளம் போட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், அதற்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தொடர் கண்காணிப்பு செய்திடும் வகையில் புதிய விதிமுறைகள் நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை தனியார் கல்லூரிகள் பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் தடையின்மை சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தன்னாட்சி அங்கீகாரம் பெற கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில், முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில் 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது அவசியம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனத்தின் தரக்குறியீடு 10-ல் இருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு தேர்ச்சி விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் எனவும், விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய துறைகள் தொடங்க வேண்டும் எனில் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற வேண்டும் எனவும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாத தன்னாட்சி கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்யவும் புதிய விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story