ரூ.1 லட்சம் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்


ரூ.1 லட்சம் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:15 PM GMT (Updated: 24 Jan 2023 7:16 PM GMT)

கீழையூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மது பாட்டில்களை டாஸ்மாக் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்

கீழையூரில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மது பாட்டில்களை டாஸ்மாக் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மது கடத்தல்

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக வெளிமாநில மது விற்பனை நடந்து வந்தது.

இதனை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க போலீஸ் மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டன.

டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு

இங்கிருந்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆனந்தம் நகரில் உள்ள ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

ரூ.1 லட்சம் மது பாட்டில்கள்

டாஸ்மாக் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வீட்டுக்குள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மது பாட்டில்களை டாஸ்மாக் அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story