மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

விபத்து

திருப்பத்தூரை அடுத்த கந்திலி மோட்டூர் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் திவாகர் (வயது 26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் லோகேஷ் (21), சஞ்சய் (22) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த 24-ந்் தேதி காலை 3 மணி அளவில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை திவாகர் ஓட்டிச் சென்றார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர். தாமலேரிமுத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே புதியதாக கட்டப்பட்ட ரவுண்டானா பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

மூளைச்சாவு

இதில் திவாகர், லோகேஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். சஞ்சய் காயமின்றி உயிர் தப்பினார்.

இதனையடுத்து திவாகர், லோகேஷை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திவாகர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும், லோகேஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் திவாகருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

அவரது உடல் உறுப்புகள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தானம் பெறப்பட்டது. அதன் பிறகு திவாகர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story