வெளி நபர்கள் தலையீடு: பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு


வெளி நபர்கள் தலையீடு: பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
x

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெளி நபர்கள் தலையீடை கண்டித்து பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் கேப்பர் மலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வெளி நபர்கள் தலையீடு இருப்பதாகவும், அதை கண்டிப்பது, பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தலை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் அலுவலகம் முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வெளி நபர் ஒருவர் மதுபோதையில், ஆர்ப்பாட்டத்துக்குள் நுழைந்து தேவையில்லாத கருத்துகளை கூறினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த செயலை கண்டிக்கும் வகையில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் நேற்று ஒரு நாள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.

இதனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story