கருமந்துறை வனப்பகுதியில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கள்ளக்காதலியுடன் தற்கொலை


கருமந்துறை வனப்பகுதியில்  நெல் அறுவடை எந்திர டிரைவர்   கள்ளக்காதலியுடன் தற்கொலை
x

கருமந்துறை வனப்பகுதியில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்,

2 பிணங்கள் மீட்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கருமந்துறை வனப்பகுதியில் கிழாக்காடு என்ற இடத்தில் வாலிபர் மற்றும் பெண் என 2 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மாலை கிடந்தன. அந்த பிணங்களின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கருமந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அடர்ந்த வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அவர்கள் இருவரும் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து இறந்தவர்கள் யார் என்பதை கண்டறிய, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் பட்டியலை எடுத்து விசாரித்தனர்.

நெல் அறுவடை எந்திர டிரைவர்

இந்த விசாரணையில் இறந்து கிடந்தவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொரடிப்பட்டு ஊராட்சி வண்டாபாடி கிராமத்தை சேர்ந்த பூபாலன் (வயது 26) என்பதும், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது. பூபாலனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

நெல் அறுவடை எந்திர டிரைவரான பூபாலன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே அனவரதநல்லூரை அடுத்த ஆழிக்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி வேம்புராஜ் (24) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. வேம்புராஜிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் பூபாலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல், 3 குழந்தைகள் மற்றும் கணவரை மறக்க செய்தது.

ஊர், ஊராக சுற்றிய ஜோடி

இதனிடையே கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தால் என்ன செய்வது என்று யோசித்த பூபாலனும், வேம்புராஜிம் கடந்த மாதம் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளியேறி ஊர், ஊராக சுற்றியதாக கூறப்படுகிறது.

இந்த கள்ளக்காதல் ஜோடி காணாமல் போன நிலையில் இருவீட்டாரும் அவர்களை தேட தொடங்கினர். இந்த நிலையில் கருமந்துறை வனப்பகுதியில் அவர்கள் இருவரும் பிணமாக கிடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேர்ந்து வாழ முடியாது

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்த நிலையில், இருவீட்டாரும் தேடத்ெதாடங்கியதால் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணினர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்கள் விஷம் குடித்து இறந்தார்களா? அல்லது எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கருமந்துறை வனப்பகுதியில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story