பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழா


தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:45 PM GMT)

‘‘மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்’’ என்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழாவில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவகுமார் பேசினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

''மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்'' என்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி நாள் விழாவில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவகுமார் பேசினார்.

கல்லூரி நாள் விழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 12-ம் ஆண்டு கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விடாமுயற்சியுடன் உழைக்க...

மருத்துவ படிப்புகளில் பெண்கள்தான் அதிகம் பயின்று வருகின்றனர். மருத்துவமனைகளிலும் பெண்களே அதிகம் பணியாற்றுகின்றனர். மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய தங்களது இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும். முழு மனதுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும்.

பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும். அவர்களை ஒருபோதும் மறக்க கூடாது. நேரத்தை தவறாமல் கடைபிடித்தும் ஒழுக்கத்துடனும் பணியாற்ற வேண்டும். இவற்றை கடைபிடித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்டு மலர் வெளியீடு

பின்னர் கல்லூரி ஆண்டு மலரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவகுமார் வெளியிட, அதனை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் பெற்று கொண்டார்.

தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி கட்டுரை எழுதிய ஆசிரியர்கள், பல்கலைகழக தேர்வில் முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற மாணவிகளுக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் சிவகுமார் பரிசு வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது..

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி தொகுத்து வழங்கினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் நன்றி கூறினார்.


Next Story