நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா...?


நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா...?
x
தினத்தந்தி 16 Nov 2022 10:21 AM GMT (Updated: 16 Nov 2022 10:36 AM GMT)

தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என கமல்ஹாசன் கூறினார்.

சென்னை

நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளோடு தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

85 மாவட்டச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்தவும் கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-

தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம், கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டு உள்ளோம் இப்போது, விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். அதேபோல் கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

அண்மைக் காலமாக தி.மு.க.வுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளதார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே தற்போது பாஜக உடன் நட்பு பாராட்டி வருகிறது. இதனால் ஐஜேகே-வுக்கு பதிலாக மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.


Next Story