திருச்சி-காரைக்கால் ரெயில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்- பயணிகள்


திருச்சி-காரைக்கால் ரெயில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்- பயணிகள்
x

ஜன்சதாப்தி ரெயில் பயணிகள் பயன் பெறும் வகையில், திருச்சி - காரைக்கால் பயணிகள் ரெயிலின் கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்று நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

ஜன்சதாப்தி ரெயில் பயணிகள் பயன் பெறும் வகையில், திருச்சி - காரைக்கால் பயணிகள் ரெயிலின் கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்று நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்மிக சுற்றுலாத்தலம்

நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் மோகன், செயலாளர் சித்திக் ஆகியோர் தென்னக ரெயில்வேக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் புனித வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோவில் ஆகியவை அமைந்த ஆன்மிக சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. எனவே வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நாகை மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர்.இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் நாகை மாவட்டத்துக்கு ரெயில் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சிரமத்துக்குள்ளாகும் பயணிகள்

அந்த வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலானோர் (வண்டி எண்:12084) ஜன் சதாப்தி விரைவு ரெயிலில் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு வருகின்றனர். வாரத்தில் செவ்வாய்க்கிழமை நீங்கலாக இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வரும் பயணிகள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இறங்கி, மாலை 6 மணி வரை காத்திருந்து வேறு ரெயிலை பிடித்து செல்லவேண்டும். இல்லையென்றால் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் நாகை, திருநள்ளாறு பகுதிகளுக்கு செல்லவேண்டும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

நேரத்தை மாற்றவேண்டும்

எனவே, காலை 11.50 மணிக்கு தஞ்சை வரும் ஜனசதாப்தி ரெயில் பயணிகள், வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், தஞ்சையில் இருந்து காலை 11.40க்கு இயக்கப்படும் திருச்சி - காரைக்கால் பயணிகள் ரெயிலின் (வண்டி எண்: 06880) கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story