சேவூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் களை கட்டும் பொங்கல் திருவிழா


சேவூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் களை கட்டும் பொங்கல் திருவிழா
x

சேவூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் களை கட்டும் பொங்கல் திருவிழா

திருப்பூர்

சேவூர்,

தமிழர்களுடைய பாரம்பரிய திருவிழாவாக நான்கு நாட்களுக்கு வரிசைகட்டி கொண்டாடப்படும் ஒரு மாபெரும் பண்டிகை தைப்பொங்கல் திருவிழாவாகும்.இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட கிராம பகுதியினர் தயாராகி வருகின்றனர்.

போகிபண்டிகை

மார்கழி மாதம் கடைசி நாளான வரும் 14-ந் தேதி (சனிக்கிழமை) போகிப்பண்டிகையில் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று வரிசையாக நான்கு நாட்களுக்கு ஊரே கோலாகலமாக காட்சி அளிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்து காணப்படும். போகி பண்டிகையன்று மாலை 'காப்பு கட்டுதல்' என்கிற ஒரு விஷயமும் நடைபெறும். நம் முன்னோர்கள் ஒரு வழிபாட்டு முறையை நமக்காக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் என்றால் அதற்கு பின்னால் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது. தை முதல் நாள் பிறப்பதற்கு முந்தைய நாள் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழங்காலங்களில் எல்லாம் நம் முன்னோர்களிடம் பணப்புழக்கம் என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்காது. அதாவது தை மாதம் பிறக்கும் போது அறுவடை செய்து அதில் கிடைக்கும் வருமானம் தான் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானமாக இருக்கும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயம் எந்தவித வளர்ச்சியும் அடையாத காலம். மக்களுக்கு விவசாயம் தான் வருமானம்.

விவசாயம்

பழங்காலத்தில் விவசாயத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. விவசாயம் ஒன்று தான் அதிகமாக மக்கள் பார்த்து வந்த தொழிலாகவும் இருந்தது. விவசாயத்தை நம்பி மட்டுமே அனைவரும் வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பார்கள். தை மாதம் அறுவடை செய்த பின்னர் தான் அவர்களிடத்தில் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும்.அந்த வருமானத்தை வைத்து தான் வீட்டை புதுப்பிப்பது, சுப காரியங்கள் செய்வது என்று தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்வார்கள். இதனால் தான் போகி பண்டிகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. அந்தக் காலத்தில் கூரை மற்றும் பனை ஓலை வீடுகள் தான் அதிகம் இருக்கும். பழைய கூரைகளையும், ஓலைகளையும் எரிப்பதற்கு போகி பண்டிகையை பயன்படுத்திக்கொண்டார்கள். போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற காப்பு கட்டுதல் என்ற வழிமுறையை கடைபிடித்தார்கள்.

காப்பு கட்டுதல்

காப்பு கட்டுதல் என்பது வேப்பிலை, பீளைப்பூ, கருந்துளசி, தும்பை இலை, ஆவாரம்பூ ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக்கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள். இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.வேப்பிலையை தோரணமாக கட்டுவதும், சொருகி வைப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்க்கிருமிகளின் தாக்குதல்கள் இன்றி ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கு உதவியாக இருக்கும். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொண்டால் போதும்! வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் நேர்மறை அதிர்வலைகள் நிச்சயம் உண்டாகும்.விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் அந்த சூரிய பகவானுக்கும், வருண பகவானுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்த இந்த நாள் தான் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இப்பேற்பட்ட தைத்திருநாளை வீட்டில் இருக்கும் அனைவரும் நோய் நொடியில்லாமல், ஆரோக்கியமாக, சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டியது அவசியம் என்று கருதிய நம் முன்னோர்கள் இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக, பண்டிகை தொடங்குவதற்கு முன், போகி அன்று செய்யக்கூடிய ஒரு நிகழ்வுதான் இந்த காப்பு கட்டுதல் ஆகும். தற்போது, கிராமபகுதிகளில்,

அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராகி வருகிறார்கள்.

விளையாட்டு போட்டிகள்

கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள், பொங்கல் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக, மைதானத்தை சுத்தம் செய்தும்,

அழைப்பிதழ்கள் அச்சடித்து வீடுகளுக்கும், அருகில் உள்ள கிராமங்களிலும் கொடுப்பதை காணமுடிகிறது. கிராம பெண்கள் பொங்கல் திருநாளில் ஒன்று கூடி ஒரே இடத்தில் (மைதானம்) பொங்கல் வைக்கவும், பூப்பறிக்க செல்வதற்கும், அனைவரும் புத்தாடை ஒரே கலரில் சேலைகள் அணிந்து, தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட உள்ளார்கள்.இதனால், சேவூர் கிராம பகுதிகளில் பொங்கல் திருவிழா களை கட்டி உள்ளது.



Next Story